டெல்லியில் சந்தேகத்தில் நண்பரை கொன்று உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்த வாலிபர்


டெல்லியில் சந்தேகத்தில் நண்பரை கொன்று உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்த வாலிபர்
x
தினத்தந்தி 22 Oct 2017 5:46 AM GMT (Updated: 22 Oct 2017 5:45 AM GMT)

டெல்லியில் மனைவியுடன் தகாத தொடர்பு என்ற சந்தேகத்தில் நண்பரை கொன்று உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் மனைவியுடன் தகாத தொடர்பு என்ற சந்தேகத்தில் வாலிபர் நண்பரை கொன்று உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியை சேர்ந்தவர் பாதல் மண்டல் என்ற சுவப்பன் சிங்ரா (வயது 31). இவர் உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் விபின் ஜோஷி என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9ந்தேதியில் இருந்து ஜோஷியை காணவில்லை. அவரது உடல் கடந்த 15ந்தேதி கண்டெடுக்கப்பட்டது. ஒடிசாவில் பதுங்கி இருந்த பாதல் 3 நாட்களுக்கு பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் ஜோஷி பலமுறை வந்து சென்ற விவரம் எனக்கு தெரிய வந்தது. எனது மனைவி ஜோஷியுடன் தகாத தொடர்பு வைத்துள்ளார் என சந்தேகம் எழுந்தது. அதனை தொடர்ந்து ஜோஷியை கொலை செய்ய திட்டம் தீட்டினேன் என பாதல் கூறியுள்ளார்.

யாருக்கும் சந்தேகம் வந்து விட கூடாது என்பதற்காக விடுமுறை எடுத்து கொண்டு பாதல் சென்றுள்ளார். சம்பவத்தன்று உணவு விடுதியில் இருந்து இறைச்சிக்கான கத்தியை எடுத்து சென்றுள்ளார். பாதலின் வீட்டில் வைத்து இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன்பின் ஜோஷியை பாதல் கொலை செய்துள்ளார். அவரது உடலை வெட்டி பிரிட்ஜில் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து கொல்கத்தாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு தப்பியோடி உள்ளார். அவரது செல்போனை வைத்து டெல்லி போலீசார் குழு கொல்கத்தா சென்றது. ஆனால் அங்கிருந்து ஒடிசாவின் ரூர்கேலா நகருக்கு பாதல் தப்பி சென்ற விவரம் போலீசாருக்கு தெரிய வந்தது.

போலீசாரை திசை திருப்புவதற்காக போலியான அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களையும் பாதல் தயார் செய்து வைத்து உள்ளார். ஆனால் அவரது உறவினர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் பாதலை கைது செய்துவிட்டனர்.


Next Story