ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1 வரை நீட்டிப்பு


ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மே 1 வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 22 April 2024 10:40 AM GMT (Updated: 22 April 2024 10:47 AM GMT)

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை போலீசார் கைது செய்தனர்.

புதுடெல்லி,

வெளிநாடுகளுக்கு சூடோஎபிட்ரின் என்ற போதைப் பொருளைக் கடத்திய புகாரில், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும் (என்சிபி), டெல்லி காவல் துறையும் இணைந்து, கடந்த பிப். 15-ஆம் தேதி மேற்கு டெல்லியில் 3 பேரை கைது செய்தது. கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் டெல்லியில் மார்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரை 2 நாட்கள் சென்னை அழைத்து வந்து என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விவகாரத்தை விசாரணை செய்த டெல்லி அமலாக்கத் துறை, ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. மேலும் இவ்வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இவர்கள் 5 பேரின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 5 பேரும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர்களின் நீதிமன்ற காவலை மே 1-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேர் மீதான காவலை மே 1-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story