மைசூரு மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா


மைசூரு மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது மைசூரு மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழா மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் தகவல்

மைசூரு:

கர்நாடக மருத்துவ கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் ஒருநாள் சுற்றுப்பயணமாக மைசூரு வந்தார். அவர் காலை 11 மணியளவில் மைசூரு டவுன் பகுதியில் உள்ள ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி, டிராமா சென்டர், மாவட்ட ஆஸ்பத்திரி, மற்றும் கே.ஆர். ஆஸ்பத்திரி, செலுவாம்பா பிரசவ ஆஸ்பத்திரிகளில் ஆய்வு நடத்தினார். பின்னர் மந்திரி சரணபிரகாஷ் பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மைசூரு மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசு ஊக்கத்தொகை விரைவில் வெளியிடும். மைசூரு மருத்துவ கல்லூரி நூற்றாண்டு விழா நினைவாக, மைசூருவில் புற்றுநோய் ஆஸ்பத்திரி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்குகிறது. மருத்துவ கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் மருத்துவ இடங்களை மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவ கல்லூரிகளை விட தனியார் மருத்துவ கல்லூரிகள் மாநிலத்தில் அதிகமாக உள்ளது. கே.ஆர். ஆஸ்பத்திரியில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பணிகள் முடிந்த பின்னர் ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு மந்திரி கூறினார். பேட்டியின்போது, கே.ஹரிஷ் கவுடா எம்..எல்.ஏ., டி. திம்மையா எம்.எல்.சி, மைசூரு மருத்துவக் கல்லூரி இயக்குனர் சுஜாதா ராத்தோட், மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தின் டீன் கே.ஆர். தக்ஷயாணி உள்பட பலர் இருந்தனர்.


Next Story