தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம்


தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க அவசர சட்டம்
x
தினத்தந்தி 25 July 2017 10:15 PM GMT (Updated: 25 July 2017 6:48 PM GMT)

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்காக அவசர சட்டம் கொண்டு வருவதற்கான தீவிர ஆலோசனையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

சென்னை,

மருத்துவ கல்வி இடங்களை ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்த தேர்வினால் தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பலருக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைக்காத சூழ்நிலை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சட்டசபையில் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கும் சட்டத்தை ஏகமனதாக சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதியிடம் இந்த சட்டமசோதா கொண்டு செல்லப்பட்டு, அதில் அவர் கையெழுத்திட்ட பிறகுதான் அது சட்டமாக்கப்படும்.

இதனிடையே, இந்த ஆண்டுக்காக ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது. ஆனாலும், மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 85 சதவீதம் பேருக்கு மருத்துவக் கல்வி இடம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது.

‘நீட்’ தேர்வு மூலம் தமிழக மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை நீக்க அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. சட்டரீதியாக கதவு அடைக்கப்பட்டதை அடுத்து, ‘நீட்’ தொடர்பான சட்டமசோதாவுக்கு உயிர்கொடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது.

‘நீட்’ சட்டமசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் பலர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து வருகின்றனர். சில அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ‘நீட்’ பற்றி தமிழகத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள், ‘‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம்’’ என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ‘நீட்’ தேர்வில் இருந்து தற்காலிக விலக்குபெறும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முன்வைத்துள்ள போதிலும், ஒரு ஆண்டுக்காவது ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்குபெற மாநில அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா?, அதற்கேற்ற அவசர சட்டத்தை கொண்டுவர முடியுமா?, அந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா? ஆகிய கேள்விகளை முன்வைத்து சட்டரீதியான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ‘சட்டரீதியான ஆலோசனை நடப்பது உண்மை என்றாலும், அவசர சட்டம் தொடர்பாக இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’ என்று கூறப்பட்டது.


Next Story