போயஸ் கார்டன் இல்லத்தில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின


போயஸ் கார்டன் இல்லத்தில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின
x
தினத்தந்தி 20 Nov 2017 12:46 AM GMT (Updated: 20 Nov 2017 12:46 AM GMT)

வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டன் இல்லத்தில் நடத்திய சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

சென்னை,

வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஆபரேஷன் கிளன் மணி’ என்ற பெயரில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடு, நிறுவனங்கள் என ஒரே சமயத்தில் 187 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 5 நாட்கள் இடைவிடாமல் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனையில் ரூ.1,480 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாக தெரிகிறது. மேலும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகள், ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்களும் அதிகாரிகளின் கையில் சிக்கின.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதில் சம்பந்தப்பட்டவர்கள் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் உள்ள பினாமி சொத்துகளை கண்டறிந்து, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

ஏற்கனவே நடத்திய சோதனையை போல் மீண்டும் மெகா சோதனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இந்த அதிரடி சோதனை பட்டியலில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு, சிறுதாவூர் பங்களாவும் இடம் பெற்று இருப்பதாகவும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் வீடுகளும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா குடும்பத்தினர், உறவினர்களுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை திறந்து சோதனை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மீண்டும் எங்கெங்கு சோதனை நடத்துவது, அதிகாரிகள் குழு எங்கு கூடுவது, எந்த நேரத்தில் சோதனை மேற்கொள்வது போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரும் வருமான வரித்துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படவுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story