பாராளுமன்ற தேர்தல் : கூட்டணிக்கு கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு ; தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?


பாராளுமன்ற தேர்தல் :  கூட்டணிக்கு கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் அழைப்பு ; தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?
x
தினத்தந்தி 9 Feb 2019 8:46 AM GMT (Updated: 9 Feb 2019 8:46 AM GMT)

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அழைப்பு விடுத்து உள்ளார்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன.

இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்புகிறது.

கமலும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விருப்பமான மனநிலையிலேயே இருக்கிறார். ஏற்கனவே கமல் டெல்லி சென்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

தி.மு.க.வை பொறுத்தவரை 20 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் காங்கிரஸ்-8, இந்திய கம்யூனிஸ்டு-1, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-1, ம.தி.மு.க.-2, விடுதலை சிறுத்தைகள்-1, முஸ்லிம் லீக்-1 என்ற விகிதத்தில் பேசி வருகிறார்கள்.

காங்கிரஸ் தொகுதிகளில் ஒரு தொகுதியை குறைத்து 2 அல்லது 3 சீட் வரை கமலுக்கு கொடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆனால் கமல் 2 தொகுதிகள் என்றால் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேருவதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் கமல்ஹாசனை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் சென்றுள்ளார்.

டெல்லியில் இன்று அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு தமிழக கூட்டணி நிலவரம், கூட்டணியை வலுப்படுத்த கமலை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதனால் கமலை கூட்டணியில் சேர்க்க தி.மு.க. விரும்புமா? என்று தெரியவில்லை. 

இந்த நிலையில்  சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.எஸ்.அழகிரி நாட்டின் இறையாண்மையையும் மதச்சார்பின்மையையும் காப்பாற்ற மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பதாக கூறினார். கூட்டணியில் உள்ள கட்சிகள் மகத்தான சாதனைகளை புரிந்துள்ளன. அதே வேளையில் சில தவறுகளையும் செய்திருக்கலாம், அதை பார்க்க வேண்டிய நேரம் இது அல்ல எனத் தெரிவித்தார்.

மேலும் கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் அழகிரி அழைப்பு விடுத்து உள்ளார்.

Next Story