

சென்னை
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரின், 11 வது சீசன் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது.
2018-ஆம் ஆண்டு நடைபெறும் 11-வது ஐபிஎல் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னணி வீரர்கள் பலர், இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளதால், எந்த அணி, எந்த வீரர்களை கைப்பற்றும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் வரும் தொடரில் களம் இறங்குவதால், நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் 2 ஆண்டுகள் தடை செய்யபட்டு இருந்ததால் ரெய்னா குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
இது குறித்து ரெய்னா கூறியதாவது:-
டோனி கேப்டனாக இருப்பார். நான் துணை கேப்டனாக இருக்க போகிறேன். ஜடேஜா 3-வது இடத்தில் இருப்பார். பின்னர் ஏலத்தில் சில வீரர்கள் எடுக்கப்பட உள்ளனர்.
நாம் அனைவருமே விரைவில் சந்திப்போம். ஏலத்திற்கு பின்னர் திட்டமிடுதல் குறித்து முடிவு செய்யப்படும். ஏற்கனவே எனக்கு ஆவணங்கள் கிடைத்துவிட்டது. நான் அதை கடந்து செல்ல வேண்டும்.
சில முக்கியமான தரமான இந்திய வீரர்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.
இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த அணியாக இருக்க வேண்டும் என எனக்கு ஓர் உணர்வு உள்ளது. குஜராத்திற்கு இரண்டு ஆண்டுகள் நான் விளையாடியிருக்கிறேன்.
டோனி புனே அணிக்காக விளையாடினார். மேலும் இந்தியாவுக்கு நிறைய போட்டிகளில் விளையாடினார், பின்னர் நான் நிறைய உள்நாட்டு போட்டிகளில் விளையாடி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.