சர்வதேச பெண்கள் டி-20 கிரிக்கெட்: ரன் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட் - இந்தோனேசிய வீராங்கனை சாதனை


சர்வதேச பெண்கள் டி-20 கிரிக்கெட்: ரன் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட் - இந்தோனேசிய வீராங்கனை சாதனை
x

இந்தோனேசிய வீராங்கனை ரொமாலியா 3.2 ஓவர் பந்து வீசி ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாலி,

மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. இதன் 5-வது ஆட்டம் பாலியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தோனேசியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய மங்கோலியா 16.4 ஓவர்களில் வெறும் 24 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தோனேசியா 127 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.

அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்த இந்தோனேசியா சுழற்பந்து வீச்சாளர் 17 வயதான ரொமாலியா, 3.2 ஓவர் பந்து வீசி 3 மெய்டனுடன் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு நெதர்லாந்தின் பிரடெரிக் ஒவர்டிக் 2021-ம் ஆண்டில் பிரான்சுக்கு எதிராக 3 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

இதைத் தொடர்ந்து நடந்த கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தோனேசியா அபார வெற்றி பெற்றது. இதில் மங்கோலியா நிர்ணயித்த 52 ரன் இலக்கை இந்தோனேசியா 9.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்தது.


Next Story