வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது - சாம் கர்ரன்


வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது - சாம் கர்ரன்
x

Image Courtesy: Twitter

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

சண்டிகர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசனின் 33-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஒரு போட்டியை நெருங்கி வந்து தோற்றுள்ளோம். இந்த ஆட்டம் மிக நெருக்கமாக வந்தது. ஆனாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது

அசுதோஷ் சர்மாவின் ஆட்டம் இந்த போட்டியிலும் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக இருந்தது. உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது போன்ற நெருக்கமான போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் அதை ஏற்றுக்கொள்ள நேரம் பிடிக்கும். ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் போராடினர். அவர்களது நம்பிக்கை நம்ப முடியாத வகையில் இருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கூட அசுதோஷ் சர்மா ஸ்வீப் ஷாட்டுகளின் மூலம் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிக்கிறார். அவரது ஆட்டத்தை பார்க்க நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தமே. எங்களது அணியில் உள்ள சில குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் தேவையான இடத்தில் எங்களை பலப்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story