டி20 உலகக்கோப்பைக்கான அணியில் துபேவை தேர்வு செய்யுங்கள் - அஜித் அகர்கரிடம் கோரிக்கை வைத்த சுரேஷ் ரெய்னா


டி20 உலகக்கோப்பைக்கான அணியில் துபேவை தேர்வு செய்யுங்கள் - அஜித் அகர்கரிடம் கோரிக்கை வைத்த சுரேஷ் ரெய்னா
x

Image Courtesy: AFP 

லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷிவம் துபே அரைசதம் அடித்து அசத்தினார்.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.

சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற இந்திய வீரர்கள் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சுமாராக ஆடி வரும் பாண்ட்யாவுக்கு பதிலாக சி.எஸ்.கே அணியில் அதிரடியாக ஆடி வரும் ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வு செய்ய வேண்டும் என பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிவம் துபே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இதையடுத்து இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் ஷிவம் துபேவை தேர்வு செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, உலகக்கோப்பை வரவிருக்கிறது ஷிவம் துபே. அஜித் அகர்கர் பாய் தயவு செய்து ஷிவம் துபேவை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story