சென்னை தியாகராயநகர் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை தியாகராயநகர் பகுதியில் மேம்பால கட்டுமான பணி காரணமாக இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Update: 2024-04-27 02:12 GMT

சென்னை, 

சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

*சென்னை தியாகராயநகர் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. எனவே 27-ந்தேதி (இன்று) முதல் 26.4.2025 வரை ஓராண்டுக்கு பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்கள் அமலில் இருக்கும்.

*வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தியாகராயநகர் பஸ் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தியாகராயநகர் பஸ் நிலையத்தை அடையலாம்.

* பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தியாகராயநகர் பஸ் நிலையத்தை அடையலாம்.

* தியாகராயநகர் பஸ் நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைவதற்கு தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சி.ஐ.டி. நகர் 4-வது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர் 3-வது பிரதான சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.

* சி.ஐ.டி. நகர் 1-வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று, வெங்கட் நாராயணா சாலை, நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலைக்கு செல்லலாம்.

* தியாகராயநகர் பஸ் நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்