அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவரின் உடலை 2 நாட்களாக அகற்றாத அவலம்


அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவரின் உடலை 2 நாட்களாக அகற்றாத அவலம்
x
தினத்தந்தி 24 Oct 2023 3:04 PM GMT (Updated: 25 Oct 2023 5:49 AM GMT)

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவரின் உடலை வார்டில் இருந்து 2 நாட்களாக அகற்றாமல் அலட்சியமாக இருந்ததால் துர்நாற்றம் வீசியது.

காரைக்கால்

நாகை மாவட்டம் மானாம்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது தந்தையை பாம்பு கடி சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது அருகில் உள்ள வார்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது.

டாக்டர்கள், செவிலியர்கள் எதனால் துர்நாற்றம் வருகிறது என்பது தெரிந்தும் மூக்கை பொத்திக் கொண்டு சிகிச்சை அளித்தனர். ஆனால், ராஜேஷ் துர்நாற்றம் வீசிய வார்டை எட்டிப்பார்த்தபோது, படுக்கை ஒன்றில், இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதை கண்டு அதிர்சசி அடைந்தார்.

அரசு ஆஸ்பத்தி அலட்சியம்

வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது உடலை வாங்க உறவினர்கள் யாரும் வராத நிலையில் அப்படியே படுக்கையிலேயே ஒழுங்கற்ற முறையில் போட்டு வைத்துள்ளார். 2 நாட்கள் ஆகியும் அகற்றாததால் உடலில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது தெரியவந்தது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் நேற்று இரவோடு, இரவாக உடலை அகற்றினர். மேலும் அந்த இடத்தை பினாயில் ஊற்றி கழுவினர். 2 நாட்களாக இறந்தவரின் உடலை அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்ட அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story