102 டிகிரி வெயில் கொளுத்தியது; அனல் காற்று வீசியது

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டது.
102 டிகிரி வெயில் கொளுத்தியது; அனல் காற்று வீசியது
Published on

மதுரை,

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டதால் கண்மாய், குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மதுரையைப் பொறுத்த வரையில் வைகை ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இந்த மாதம் மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை பெய்தது. பெரிய அளவில் மழை இல்லை. அதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டது.

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி முடிவடைகிறது. வழக்கமாக இந்த காலக் கட்டத்தில் வெயிலின் கொடுமை அதிகம் இருக்கும். ஆனால் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாகவே சுள் என்று வெயில் அடித்து வருகிறது.

நேற்று முன் தினம் 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது. ஆனால் நேற்று அதிக பட்சமாக 102 டிகிரி வெயில் கொளுத்தியது. அனல் காற்று வீசியது. ரோடுகளில் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்றவர்கள் வெயிலால் அவதிக்குள்ளானார்கள். பஸ்களில் இருக்கைகள், கைப்பிடி கம்பிகள் சூடாக இருந்தால் பயணிகள் சிரமத்திற்குள்ளனார்கள். இரவில் வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. மின் விசிறியை போட்டாலும் லேசான வெப்பக்காற்றே வீசியது. எனவே இரவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் தூக்கமின்றி தவித்தனர்.

வெப்பத்தினால் தாகத்தை தணிக்க பொதுமக்கள் மோர், பழச்சாறு, இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை பருகிவருகிறார்கள். நொங்கு, தர்பூசணி விற்பனையும் அதிகரித்துள்ளது. தற்போதே இப்படி வெயில் கொளுத்தி வருவதால் கத்திரி வெயில் காலத்தில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதே பொதுமக்களின் அச்சமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com