108 அடி உயர சிவலிங்கம்

கம்மசமுத்திரம் என்ற கிராமத்தில் உள்ள இந்தக் கோவிலை, சாம்பசிவமூர்த்தி சுவாமிகள் உருவாக்கினார்.
108 அடி உயர சிவலிங்கம்
Published on

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, கோடி லிங்கேஸ்வரர் கோவில். கம்மசமுத்திரம் என்ற கிராமத்தில் உள்ள இந்தக் கோவிலை, சாம்பசிவமூர்த்தி சுவாமிகள் உருவாக்கினார். கலியுகத்தில் அமைதி, நாட்டு நலன், மக்கள் மத்தியில் பக்தியை வளர்ப்பது ஆகிய உயர்ந்த எண்ணத்துடன் 1980-ம் ஆண்டு 13 ஏக்கர் நிலத்தில் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. 1980-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி, முதல் லிங்கம் வைக்கப்பட்டது. பின்னர் கோவில் மூலஸ்தானம் கட்டப்பட்டு படிப்படியாக கோவிலை சுற்றிலும் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோவிலின் சிறப்பு அம்சமாக, மிக உயரமான 108 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த லிங்கத்தை முதலில் சிமெண்டால் உருவாக்கி, பின்னர் அதன்மேல் கருப்பு நிற பளிங்கு கற்களை பதித்து இருக்கிறார்கள். இந்த லிங்கம் 55 அடி அகலமும், 50 அடி நீளமும் கொண்டுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு முதல் இக்கோவிலை சுற்றிலும் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. லிங்கங்கள் சுமார் ஒரு அடி முதல் 3 அடி உயரம் வரை உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com