

மும்பை
மும்பை காட்கோபர் கிழக்கு திலக் சாலையில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பராக் ஷா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவி ஒருத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.
தனது விருப்பப்படி செயல்பட்டால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் அளிப்பதாக மாணவியிடம் தெரிவித்து உள்ளார்.
அவரது நடத்தையால் பயந்துபோன மாணவி, அண்மையில் நடந்த 3 தேர்வுகளையும் எழுதாமல் வீட்டில் முடங்கி கிடந்திருக்கிறாள். இதனால் சந்தேகம் அடைந்த அவளது தாய் விசாரித்த போது, ஆசிரியர் பராக் ஷா தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருவது பற்றி கூறி மாணவி கதறி அழுதாள்.
இதை கேட்டு பதறி போன மாணவியின் தாய் உடனே பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று ஆசிரியர் பராக் ஷா மீது நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டு உள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் பராக் ஷாவிற்கு ஆதரவாக பேசி இருக்கின்றனர்.
போலீசில் புகார்
எனவே மாணவியின் தாய் மகளை பந்த்நகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று, ஆசிரியர் பராக் ஷா, பள்ளி நிர்வாகி ஜீசஸ் லால், முதல்வர் கவிதா மல்கோத்தா, ஒருங்கிணைப்பாளர் வர்ஷா ஜாக்லேக்கர், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த பிங்கி புஜாரா, பிமோத் பாட்டினி ஆகிய 6 பேர் மீது புகார் கொடுத்தார்.
ஆசிரியர் கைது
அதன்பேரில் போலீசார் ஆசிரியர் பராக் ஷா மீது பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். மேற்படி பள்ளி நிர்வாகத்தினர் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் ஐந்து பேரும் அந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக மும்பை செசன்சு கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து உள்ளனர்.