ஓடும் ரெயிலில் 17 கிலோ வெள்ளி கட்டிகள், ரூ.4¼ லட்சம் பறிமுதல்

ஓடும் ரெயிலில் வெள்ளி வியாபாரியிடம் இருந்து 17 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4¼ லட்சத்துக்கு ஆவணங்கள் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓடும் ரெயிலில் 17 கிலோ வெள்ளி கட்டிகள், ரூ.4¼ லட்சம் பறிமுதல்
Published on

காட்பாடி

ஓடும் ரெயிலில் வெள்ளி வியாபாரியிடம் இருந்து 17 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4 லட்சத்துக்கு ஆவணங்கள் இல்லாததால் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓடும் ரெயிலில் சோதனை

சென்னை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சச்சின் குமார் உத்தரவின்படி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் ஏட்டுகள் நரசிம்மராஜ், ஸ்ரீதர், இளையபாரதி, பிரின்ஸ்குமார் சிங் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து விழுப்புரம் செல்லும் புருலியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயிலில் எஸ்.5 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் சேலம் மாவட்டம் சேவபேட்டை, பங்களா தெருவை சேர்ந்த ரவி (வயது 40). வெள்ளி வியாபாரி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

வெள்ளி கட்டிகள், பணம் பறிமுதல்

அதில், கட்டுக்கட்டாக பணம், மற்றும் வெள்ளி கட்டிகள் இருந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் ரவியிடம் இல்லை. இதையடுத்து, அவரிடமிருந்த 17 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதற்குள் ரெயில் வாலாஜாபேட்டையை நெருங்கியது. பறிமுதல் செய்த வெள்ளி கட்டிகள், பணத்துடன் ரவியை போலீசார் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com