தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்கள் கைது

முள்ளக்காடு பகுதியிலுள்ள மளிகை கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 10 ரூபாய் நாணயங்கள், குளிர்பானங்கள், சிப்ஸ் உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 சிறுவர்கள் கைது
Published on

தூத்துக்குடி முள்ளக்காடு, நேருஜிநகர் பகுதியை சேர்ந்த ரத்தினதுரை (வயது 70), அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 10-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் இவரது மளிகை கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 10 ரூபாய் நாணயங்கள் மற்றும் அரை லிட்டர், ஒரு லிட்டர் குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் 5 உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை திருடிச் சென்றனர்.

தெருவில் நாய்கள் குறைக்காமல் இருக்க பிஸ்கட் மற்றும் சிப்ஸ்களை போட்டு விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேருஜி நகரில் திருட்டு நடைபெற்ற மளிகை கடை அருகே உள்ள பாஸ்கர் என்பவர் வீட்டு முன்பாக முன் விரோதம் காரணமாக 11 வயது, 12 வயதுக்கு உட்பட்ட 3 இளஞ்சிறார்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அது தரையில் விழுந்து வெடித்து சிதறி எரிந்துள்ளது. இதன் சத்தம் கேட்டு மளிகை கடைக்காரர் ரத்தினதுரை மற்றும் வீட்டில் வசித்த பாஸ்கர் ஆகியோர் வெளியே வந்து பார்த்து சிறுவர்களை சத்தம் போட்ட போது அவர்களையும் அந்த சிறுவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி 3 இளஞ்சிறார்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி மளிகைக் கடை திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முத்தையாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு சுவரொட்டிகள் அப்பகுதியில் உள்ள அனைத்து பங்குகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com