3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

சேலம் செவ்வாய்பேட்டையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
Published on

சேலம்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்சிங். இவர் சேலம் செவ்வாய்பேட்டை தேர்முட்டி அருகே பேன்சி கடை நடத்தி வருகிறார். அதன் மேல்மாடியில் அதே மாநிலத்தை சேர்ந்த தேஜாராம், பிரதாப் ஆகியோரும் பேன்சி கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை கடைகளை திறப்பதற்காக ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது 3 கடைகளுக்கும் செல்ல கூடிய மெயின் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அமர்சிங் கடைக்கு சென்று பார்த்தனர். அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த வாசனை திரவியம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 3 பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கடையில் இருந்த பணமும் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் அந்த கடையையொட்டி மேல் மாடியில் உள்ள தேஜாராம், பிரதாப் ஆகியோரது கடைகளின் ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அந்த கடைகளில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த வாசனை திரவிய பொருட்கள், மடிக்கணினி ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரின் பேன்சி கடைகளில் பணம், நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு போய் உள்ளது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரமங்கலம் பகுதியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர். தற்போது, எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் நடந்துள்ள இந்த துணிகர திருட்டு சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com