கொலை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கு

செய்துங்கநல்லூர் அருகே பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்த செந்தாமரைக்கண்ணன் (வயது 56) என்பவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முறப்பநாடு பக்கப்பட்டியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் வேல்முருகன் மார்த்தாண்டன் (42), வல்லநாடு முத்தாரம்மாள்புரத்தை சேர்ந்த மந்திரம் மகன் மகேஷ்பாபு (35), வல்லநாடு பார்வதியம்மாள்புரத்தை சேர்ந்த குற்றாலம் மகன் கந்தகுமார் (33), கலியாவூரை சேர்ந்த சொரிமுத்து மகன் சுடலைமணி (29), பாளையங்கோட்டை மூலிகுளத்தை சேர்ந்த செல்லையா மகன் ஜெகன் என்ற ஜெகன்பாண்டியன் (33) ஆகிய 5 பேரும் செய்துங்கநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதே போன்று முத்தையாபுரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக, தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் முகுந்தன்ராஜா (23) என்பவரை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இதைத் தொடர்ந்து 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வேல்முருகன் மார்த்தாண்டன், மகேஷ்பாபு, கந்தகுமார், சுடலைமணி, ஜெகன் என்ற ஜெகன் பாண்டியன், முகுந்தன் ராஜா ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட 12 பேர், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் உட்பட 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com