ரிஷிவந்தியம் அருகே சிக்குன்குனியா காய்ச்சலால் 8 பேர் பாதிப்பு

ரிஷிவந்தியம் அருகே சிக்குன் குனியா காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அருகே சிக்குன்குனியா காய்ச்சலால் 8 பேர் பாதிப்பு
Published on

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ளது. பள்ளிப்பட்டு கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தை சேர்ந்த 20 பேர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களின் ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, கண்ணன்(வயது 36), அவருடைய மகள் கனிஷ்கா(5), சகுந்தலா(27), பரமசிவம்(71), கருப்பாயி(65), நிர்மலா(27) உள்ளிட்ட 8 பேருக்கு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குணமடைந்த சிலர் வீடுகளுக்கு திரும்பினர். சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மீதமுள்ள 12 பேர் கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் சிக்குன்குனியா காய்ச்சலை தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் பள்ளிப்பட்டு கிராமத்தில் முகாமிட்டு, கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்து, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரே கிராமத்தில் 8 பேர் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com