'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை' - குஷ்பூ


அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை - குஷ்பூ
x
தினத்தந்தி 20 Jan 2024 3:43 PM IST (Updated: 20 Jan 2024 3:54 PM IST)
t-max-icont-min-icon

ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தும் பணியை குஷ்பூ மேற்கொண்டார்.

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தும் பணியை நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ மேற்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. இங்கு எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. ராமரை தரிசனம் செய்ய சுமார் 500 ஆண்டுகளாக நாம் காத்திருக்கிறோம். தற்போது பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நாம் ராமரை பார்க்க இருக்கிறோம். ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

ராமர் கோவில் ஜாதி மதம் சார்ந்தது கிடையாது. இந்திய மக்களின் ஒற்றுமையை பறை சாற்றும் விதமாக இந்த ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அயோத்தியில் கூட வேறு மதங்களை சார்ந்தவர்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமரை வரவேற்க காத்திருக்கின்றனர். உலகமுழுவதும் உள்ள இந்தியர்கள் இந்த நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.

ராமர் கோவிலை கட்டியதால் பிரதமர் மோடிக்கு பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. 92 வயதான எனது அத்தை நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசீர்வதித்தார். ராமர் கோவில் இந்தியர்களின் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் வெளிக்காட்டும் விதமாக கட்டப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story