31 துறைகள்...10 உலக சாதனைகள்... 'பேய் கொட்டு' பட இயக்குனருக்கு குவியும் பாராட்டு


31 துறைகள்...10 உலக சாதனைகள்... பேய் கொட்டு பட இயக்குனருக்கு குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 2 April 2024 7:28 AM GMT (Updated: 2 April 2024 7:32 AM GMT)

'பேய் கொட்டு'திரைப்படத்தை உருவாக்கி 10 உலக சாதனைகளையும் படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.லாவண்யா.

சென்னை,

தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராப்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. அந்த 24 கிராப்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, மேலும் கூடுதலாக ஏழு துறைகளையும் சேர்த்து சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் என்ஜினீயரிங், உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து மொத்தம் 31 துறைகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சுயாதீன திரைப்பட கலைஞர் எஸ்.லாவண்யா. இதன் மூலம் 10 உலக சாதனைகளையும் படைத்துள்ளார் இயக்குனர் எஸ்.லாவண்யா.

அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். லாவண்யா, பி. வசந்த், ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் எஸ். லாவண்யா தயாரித்திருக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் எஸ். லாவண்யா பேசுகையில், '' நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், பைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எப் எக்ஸ், வி எப் எக்ஸ், எஸ் எப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன் உள்ளிட்ட 31 கிராப்டுகளையும் சுயமாக கற்று, 'பேய் கொட்டு' திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

'பேய் கொட்டு' என்பது, தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா... அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. '' இவ்வாறு பேசினார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராப்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முயற்சிக்காக பட இயக்குனர் எஸ்.லாவண்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story