தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்... பான் இந்தியா படத்தில் ஜி.வி.பிரகாஷ்...!


தமிழில் இயக்குனராக அறிமுகமாகும் அனுராக் காஷ்யப்... பான் இந்தியா படத்தில் ஜி.வி.பிரகாஷ்...!
x

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

சென்னை,

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் அனுராக் காஷ்யப். இவர் கென்னடி, தேவ் டி, கேங்ஸ் ஆப் வாசிப்பூர், ரிட்டர்ன் ஆப் ஹனுமான் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் கடந்த 2018ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜி.வி.பிரகாஷ், 'அனுராக் காஷ்யப் என்னை ஒரு படத்தில் நடிக்க அழைத்துள்ளார்' என்று தெரிவித்திருந்தார். எனவே விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷ் தற்போது ரிபெல், இடிமுழக்கம், 13, கள்வன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சைரன், எஸ்.கே.21, சூர்யா 43, சீயான் 62 போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். எனவே இந்த பட வேலைகள் முடிந்த பிறகு அனுராக் கஷ்யப் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story