'பதான்' விவகாரம் : குரைப்பார்கள்… கடிக்கமாட்டார்கள்…! பிரகாஷ்ராஜ் கோபம்


பதான் விவகாரம் : குரைப்பார்கள்… கடிக்கமாட்டார்கள்…! பிரகாஷ்ராஜ் கோபம்
x

பதான்’ திரைப்படத்தை தடை செய்யவும், புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர் , சும்மா ‘குரைப்பவர்கள்’ மட்டும் தானே தவிர, ‘கடிக்கமாட்டார்கள்’ என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

சென்னை

4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் நடித்துள்ளனர்.

பதான் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் இப்படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 419 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் பதான் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடம் பிடித்ததோடு சல்மான்கானின் 'பஜ்ரங்கி பைஜான்' மற்றும் அமீர்கானின் 'தங்கல்' ஆகிய படங்களின் வசூலையும் தாண்டியுள்ளது.

பதான் படத்தில் இடம்பெற்றுள்ள 'பேஷாரம் ரங்' பாடல் சர்ச்சையில் சிக்கி பல விமர்சனங்களை சந்தித்தபோது பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது பதான்' திரைப்படத்தை தடை செய்யவும், புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர் , சும்மா 'குரைப்பவர்கள்' மட்டும் தானே தவிர, 'கடிக்கமாட்டார்கள்' என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பிரகாஷ்ராஜ் கூறும் போது

இந்த படத்தை எதிர்த்தவர்களால் பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு 30 கோடி ரூபாய் கூட வசூல் செய்ய முடியவில்லை.. காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படத்தை எடுத்தார்கள். அந்த படத்தை பார்த்துட்டு சர்வதேச கலைஞர்கள் துப்பினார்கள்.

அப்படியும் கூட இவர்களுக்கு எல்லாம் புத்தியே வரவில்லை. காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய டைரக்டர் வேறு இந்த படத்துக்கு ஏன் ஆஸ்கர் கொடுக்கவில்லை? என்று சொன்னார். ஆஸ்கர் இல்லை பாஸ்கர் விருது கூட கிடைக்காது என்று பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.பிரகாஷ்ராஜின் இந்த கிண்டல், பாஜக தரப்பை மேலும் கடுப்பாக்கி வருகிறது.

முன்னதாக, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்துக் கொண்ட பிரகாஷ் ராஜ், பதான் படம் குறித்து பேசினார். அப்போது"பதான் திரைப்படத்தை தடை செய்யவும் புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்தவர்கள் சும்மா "குரைப்பவர்கள்", "கடிக்கமாட்டார்கள்.. அவர்கள் பதான் திரைப்படத்தை தடை செய்ய விரும்பினர். ஆனால் படம் 700 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்த முட்டாள்கள், மதவெறியர்கள்.

பதானை தடை செய்ய நினைத்தவர்கள், மோடியின் (பி.எம் நரேந்திர மோடி) படத்தை 30 கோடி ரூபாய் வசூலிக்கும் அளவுக்கு கூட பார்க்கவில்லை. எல்லோருக்கும் தெரிந்ததுபோல்.அவர்கள் குரைக்கிறவர்கள், கடிக்கமாட்டார்கள் " என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story