சீயான் 63: ' மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம்?


சீயான் 63:  மஞ்சும்மல் பாய்ஸ் பட  இயக்குநருடன் இணையும் விக்ரம்?
x

மலையாளத்தில் வெளியான ‘ மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர் சிதம்பரம் அடுத்து சீயான் விக்ரம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் தங்கலான் படத்தில் கவனம் செலுத்தினார் விக்ரம். இத்திரைப்படம் மூலம் முதன்முறையாக இயக்குநர் பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார். விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீயான் 62 ஷூட்டிங் போக ரெடியாகிவிட்டார் விக்ரம்.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சீயான் 62 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சார்பட்டா பட நடிகை துஷாரா விஜயனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் சீயான் 62 ஷூட்டிங் இம்மாதம் 22-ம் தேதி தொடங்கும் என சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு, தனுஷ், விக்ரம் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினர். இதனையடுத்து இயக்குநர் சிதம்பரத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது விக்ரம் – சிதம்பரம் கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி சீயான் 63 படத்தை 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரம் இயக்கவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story