ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு

10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட்டு
Published on

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

மன்சூர் அலிகானின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, நடிகை திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும் விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான இந்த ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு பத்து நாட்கள் மேலும் அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்து 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com