நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து - கங்கனா ரனாவத்

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப்பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து - கங்கனா ரனாவத்
Published on

மும்பை,

மக்களவை தேர்தல் திருவிழா இந்தியாவில் களைகட்டியுள்ளது. திரும்பும் இடமெல்லாம் அரசியல் கட்சியினரின் ஊர்வலம், பொதுக்கூட்டம், வாகன பேரணி என வித்தியாசமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மத்தியிலும், மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல நாடாளுமன்ற தேர்தலில் சினிமா பிரபலங்களும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் களம் காண்கிறார். அவர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் வழக்கம்போல கடந்த காலங்களில் அவர் செய்த பல சம்பவங்களை எதிர்க்கட்சிகள் கிளறியுள்ளனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், கங்கனா மாட்டிறைச்சி சாப்பிட்டதாக தெரிவித்தார். இந்த கருத்தால் ஆவேசமடைந்த கங்கனா, 'இந்த செயல் வெட்கக்கேடானது என்றும்,தனது செல்வாக்கை கெடுக்க முயற்சி நடக்கிறது' என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் எக்ஸ் வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில்,

"நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த வகையான சிவப்பு இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. என்னைப் பற்றி முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவது வெட்கக்கேடானது, நான் பல தசாப்தங்களாக யோகி மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்து, ஊக்குவித்து வருகிறேன்.  மக்களுக்கு என்னைப் பற்றி  நன்றாக தெரியும். நான் ஒரு பெருமைமிக்க இந்து என்பது அவர்களுக்குத் தெரியும், அவர்களை எதுவும் தவறாக வழிநடத்த முடியாது, ஜெய் ஸ்ரீ ராம்" என கூறியுள்ளார்.

மாட்டிறைச்சி சாப்பிடும் கங்கனா என மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேசியதற்கு பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com