நிர்வாண போட்டோஷூட்- ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை போலீசார் முடிவு


நிர்வாண போட்டோஷூட்- ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை போலீசார் முடிவு
x

ரன்வீர் சிங் மீது மும்பை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். ரன்வீர் சிங்கின் ஆடை ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருந்தார். இதனை தனது சமூகவலைதளத்தில் ரன்வீர் சிங் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார்.

இதனை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) செம்பூர் காவல்துறையிடம் நடிகர் ரன்வீர் சிங் மீது புகார் அளித்து இருந்தது.

அதன் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்), போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ரன்வீர் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது. தற்போது ரன்வீர்சிங் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அதனால் அவருக்கு இன்னுன் சம்மன் அனுப்பப்பட வில்லை. அவர் மும்பை திரும்பியவுடன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மும்பை காவல்துறை முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story