நடிகை சோனாலி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்!! விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


நடிகை சோனாலி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்!! விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x

நடிகை சோனாலி வழக்கில் உணவு விடுதி உரிமையாளர் உள்பட மேலும் 2 பேரை வடகோவா போலீசார் கைது செய்துள்ளனர்.

பனாஜி,



கோவாவில் நடிகை சோனாலி போகத் (வயது 42) மர்ம மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மகளிர் அணி முன்னாள் தேசிய துணை தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர், 2019-ம் ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு குல்தீப் பிஷ்னோயிடம் தோல்வி கண்டார்.

8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் பிரபல தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். தவிர, வெப் தொடரிலும் நடித்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார்.

2020-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ஆகஸ்டு 22-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என அறிவித்தனர்.

சோனாலியின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. எனினும், சோனாலி போகத் மரணத்தில் சதி திட்டம் உள்ளது. உணவு சாப்பிட்ட பின்னர், அசவுகரியம் ஏற்பட்டு உள்ளது என அவர் கூறினார். அவரது உணவில் விஷம் கலக்கப்பட்டு உள்ளது என சோனாலியின் சகோதரி குற்றச்சாட்டு எழுப்பினார்.

ஆனால், சோனாலியின் மரணத்தில் சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் இல்லை என போலீசார் மறுத்தனர். இதுபற்றி கோவா டி.ஜி.பி. ஜஸ்பால் சிங் கூறும்போது, இதுவரை எங்களுக்கு சந்தேகத்திற்குரிய விசயம் எதுவும் தென்படவில்லை. ஆனால், பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே என்ன விவரம் என்பது தெரிய வரும் என கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு அரியானாவில், பண்ணை வீட்டில் இருந்து சோனாலியின் கணவர் சஞ்சய் போகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியது. எனினும், சோனாலி சம்பவத்தின்போது மும்பையில் இருந்துள்ளார். இந்நிலையில், சோனாலியின் மரணத்திலும் மர்மம் உள்ளது என அவரது சகோதரி குற்றச்சாட்டு கிளப்பினார்.

சோனாலி தனது மறைவுக்கு சில மணிநேரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு உள்ளார். அவரது மறைவு பற்றிய பல்வேறு தொடர்புடைய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நடிகை சோனாலி போகத் மறைவு இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடந்தது. சோனாலியின் 15 வயது மகள் யசோதரா கூறும்போது, எனது தாயாருக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியமுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.

சோனாலியின் சகோதரி ரூபேஷ் கூறும்போது, அவர்களுடைய தாயார், சோனாலி மரணம் அடைவதற்கு ஒரு நாள் முன்பு சோனாலியிடம் பேசினார். அதில், சாப்பிட்ட பின்னர் அசவுகரியமுடன் உணர்கிறேன் என்று சோனாலி கூறியுள்ளார் என ரூபேஷ் தெரிவித்து உள்ளார்.

கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குடும்பத்தினர் ஒப்புதலுக்கு பின், அவரது பிரேத பரிசோதனை கடந்த வியாழ கிழமை நடந்தது. அதன் முடிவுகள் வெளிவந்து உள்ளன. அதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, அவரது மரண வழக்கில் கொலைக்கான பிரிவும் சேர்க்கப்பட்டு உள்ளது. சோனாலியுடன் சம்பவத்தன்று இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் வாசி ஆகிய இருவரின் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த சம்பவம் பற்றி சோனாலியின் குடும்பத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டு தெரிவித்து வந்த நிலையில், அவரது சகோதரர் ரிங்கு டாக்கா கோவா போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சோனாலி, தனது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் தனது மறைவுக்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பு பேசினார். அந்த உரையாடலின்போது, தனது உதவியாளர் பற்றி சோனாலி புகாராக கூறினார்.

சோனாலி கூறும்போது, சங்வான் போதை மருந்து கலந்த உணவை தனக்கு கொடுத்து விட்டார். பின்பு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அதனை சமூக ஊடகத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார் என கூறியுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சோனாலியின் அரசியல் மற்றும் நடிப்பு தொழிலை அழித்து விடுவேன் என சங்வான் மிரட்டி உள்ளார். சோனாலியின் மொபைல் போன்கள், சொத்து பதிவுகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகளையும் பறித்து வைத்து உள்ளார் என ரிங்கு குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதேபோன்று சோனாலியின் மருமகனான மொனீந்தர் போகத் கூறும்போது, எங்களுடைய சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்துள்ளனர் என்பது நிச்சயம் என கூறியுள்ளார்.

இந்த பிரேத பரிசோதனை முடிவில் திருப்தி இல்லை என சோனாலி குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். அவரது சகோதரர் ரிங்கு கூறும்போது, புதுடெல்லி எய்ம்சில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்வோம் என்று கூறியுள்ளார். பா.ஜ.க.வில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர் எனது சகோதரி.

ஆனால், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவர் கூட எங்களுடைய உதவிக்கு வரவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, எனது சகோதரியின் உடல் மற்றும் முகம் ஆகியவற்றை பார்த்தேன். காதுகள் நீல நிறம் பாய்ந்து இருந்தன. உடலுக்குள் நஞ்சு இருக்கும்போது மட்டுமே இப்படி நடக்கும். மாரடைப்பு ஏற்பட்டால் அல்ல. என்னுடைய சகோதரி ஆரோக்கியமுடன் இருந்தவர் என கூறியுள்ளார்.

இந்நிலையில், வடகோவாவின் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதை பொருள் கடத்தல்காரர் என இருவரை கோவா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அந்நபர், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மறைந்த நடிகை சோனாலியின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 2 பேருக்கு போதை பொருட்களை வினியோகித்து உள்ளார் என கூறப்படுகிறது.

இதன்படி, தத்தா பிரசாத் காவங்கர் என்ற அந்த நபரை அஞ்சுனா பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கில் குற்றவாளிகளான இருவரும் தத்தா பிரசாத்திடம் இருந்து போதை பொருட்களை வாங்கினோம் என்று வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, கர்லீஸ் என்ற பெயரிலான உணவு விடுதியின் உரிமையாளர் எட்வின் நூனஸ் என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த விடுதியிலேயே இரவு விருந்து நிகழ்ச்சியில் சோனாலி கலந்து கொண்டுள்ளார். இதன்பின்பு அவர், தங்கியுள்ள ஓட்டலுக்கு திரும்பியுள்ளார்.

அவர் உதவியாளர்கள் இருவருடன் ஒன்றாக நடனம் ஆடுவதும், ஒரு கட்டத்திற்கு பின்பு மயக்க நிலையில், உதவியாளர்களில் ஒருவர் ஆதரவுடன் தள்ளாடியபடியே நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன.

எனினும், அடுத்த நாள் காலையில் ஓட்டலில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும், கர்லீஸ் உணவு விடுதியில் வைத்து தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் பொருளை கலந்து, சோனாலிக்கு கட்டாயப்படுத்தி கொடுத்த விவரங்களை தெரிவித்து உள்ளனர் என போலீசார் நேற்று கூறியிருந்தனர்.

பா.ஜ.க.வில் முக்கிய பிரமுகராக இருந்த அவரது மரணத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார் என கோவா முதல்-மந்திரி கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அக்கட்சியில் பல பதவிகளை வகித்த சோனாலி, தனக்கு ஏற்பட்ட விசயங்களை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால், முதல்-மந்திரி அதனை பற்றி கவனத்தில் கொள்ளாதது ஏன்? என்ற அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியும் பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி ஒரு புறம் சாடியிருந்தது.

இந்த சூழலில், வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது. பொருளாதார பலன்கள் சார்ந்து இந்த படுகொலை நடந்திருக்கும் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


Next Story