'இப்போது நீங்கள்தான் என் உத்வேகம்' - சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்


இப்போது நீங்கள்தான் என் உத்வேகம் - சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
x

அயலான் திரைப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. இப்படம் கடந்த 12-ம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்'தான். படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூலித்து சாதனை படைத்து உள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை போனில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதனை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

அவர் அந்த பேட்டியில், 'ரஜினிகாந்த் சார் அயலான் படத்தை பார்த்துவிட்டு என்னை போனில் அழைத்து பாராட்டினார். நீங்கள் எப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்..? உங்களின் படங்கள் மக்களுக்கு பிடித்து இருக்கின்றன. உங்கள் படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப உத்வேகம் அளிக்கிறது என்று சொன்னார். நான், சார் உங்களின் எந்திரன் மற்றும் 2.0 படங்கள்தான் எனக்கு உந்துதலாக இருந்தது என்றேன்.

ஆனால் அவர், இப்போது நீங்கள்தான் என் உத்வேகம் என்றார். மேலும் மக்கள் உங்களின் பெரிய படங்களை கொண்டாடுகின்றனர். இதே மாதிரி நீங்கள் நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது' என்று தெரிவித்தார்.


Next Story