ஒரு நாள் பணக்காரன்...! ஒரு நாள் பிச்சைக்காரன்...! மயில்சாமி எப்படி பட்டவர் ? - வைரலாகும் மறைந்த நடிகர் விவேக் பேச்சு !


ஒரு நாள் பணக்காரன்...! ஒரு நாள் பிச்சைக்காரன்...! மயில்சாமி எப்படி பட்டவர் ? - வைரலாகும் மறைந்த நடிகர் விவேக் பேச்சு !
x
தினத்தந்தி 20 Feb 2023 7:12 AM GMT (Updated: 20 Feb 2023 7:17 AM GMT)

தற்போது மறைந்த நடிகர் சின்னக்கலைவானர் விவேக் மயில்சாமியை குறித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மயில்சாமி. 1984-ம் ஆண்டு தாவனிக் கனவுகள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், நடிப்பில் மட்டுமல்லாமல் பலகுரல் மன்னனாக திரைப்பட தொகுப்பாளராக பணியாற்றினார்.

மயில்சாமி நடிப்பில் மட்டுமல்லாமல் சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் அரசியிலிலும் ஈடுபாடு மிக்கவராக காணப்பட்டார். இதனாலே 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால் அதில் தோற்றார்.

இருப்பினும் தனது பகுதி மக்களுக்காக உதவிகளையும், சமூக சேவைகளையும் தொடர்ந்து செய்து வந்தார் இந்த நிலையில், மயில்சாமிக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மயில்சாமி வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டு இருந்த மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதையடுத்து நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் வழிநேடுக்கிலும் பொதுமக்கள் கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்தனர் சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் தொடங்கிய இறுதி ஊர்வலம் வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்திற்கு சென்றடைந்த பின்னர் மயில்சாமி உடல்லுக்கு அவரது மகன் முறைப்படி இறுதி சடங்கு செய்தார்.

அதன் பின்னர் அவரது உடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் மயில்சாமியின் உறவினர்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்று மயில்சாமிக்கு பிரியா விடைகொடுத்தனர்.

நடிகர் விவேக்கும் மயிலசாமியும் குறிப்பிட்ட சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அதில் முக்கியமாக அமைந்தது விக்ரம் நடிப்பில் வெளியான 'தூள்'. இந்த படத்தில் "திருப்பதியில் லட்டுக்கு பதில் ஜாங்கிரி கொடுப்பதாக " மயில்சாமி விவேக்கிடம் கூறும் டயலாக் பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் 'பாளையத்து அம்மன்' படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள் ஆவர். விவேக் கடந்த 2021-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்த சூழலில் இவர்கள் இருவரும் நடித்த வீடியோ அனைவர் மனதையும் உருக செய்கிறது .

இந்த நிலையில் தற்போது மறைந்த நடிகர் சின்னக்கலைவானர் விவேக் மயில்சாமியை குறித்து பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு மயில்சாமி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'காசு மேல காசு'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, நடிகர் விவேக் நடிகர் மயில்சாமியை குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விவேக் கூறியதாவது, "மயில்சாமி என்னை விட வயதில் மூத்தவன்தான்; இருப்பினும் நான் அவனை வாடா போடா என்றுதான் அழைப்பேன். இவன பத்தின விஷயங்களை கதையை சொன்னால் பாரதிராஜாவே படம் எடுக்கிறேன் என்பார்.

இவன் இளிச்சவாயானா நல்லவனா என்றால் இளிச்சவாயன் / நல்லவன்னு தான் சொல்லணும். இப்படியொரு மனுஷன் நம்முடன் வாழ்வது, அதிலும் இந்த காலத்தில் வாழ்வது என்பது பெரிய விஷயம். யார் கேட்டாலும் தன்னிடம் உள்ளதை கொடுத்துவிடுவார்.

அப்போது சுனாமி பாதிப்பு ஏற்பட்டு கடலூர் பகுதியில் ஒரு கிராமத்திற்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்று உதவி செய்து வந்தார். இது தெரிந்ததும் மயில்சாமி நாமும் எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். இவருக்கு பெரிதாக எழுத்தறிவு இல்லை என்றாலும், நல்ல மனசு இருக்கு. இவருக்கு எம்.ஜி.ஆர் தான் எல்லாமே. அடுத்த நாள் கையில் செலவு செய்ய காசு இல்லை; பட வாய்ப்புகளும் இல்லை.

ஆனால் எதாவது செய்யணும்னு உடனே விவேக் ஓபராய் வீட்டிற்கு சென்று 'You service super' என்று கூறிவிட்டு, தனது கழுத்தில் இருந்த எம்ஜிஆர் பதக்கம் போட்டு அணிந்திருந்த தங்க செயினை கழற்றி அவரது கழுத்தில் போட்டுவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிட்டான். கொஞ்சம் நின்னு இருந்தா அவர் இந்தியில் பேசுவது புரியாமல் எப்படி சமாளிக்கிறதுன்னு யோசித்திருப்பான்

இவன் எப்படினா.. ஒரு நாள் பணக்காரனா இருப்பான், ஒரு நாள் பிச்சைக்காரனா இருப்பான்.. வீட்டுல பாரதியாரின் மனைவி ஏதாவது சம்பாதித்து விட்டு அரிசி வாங்கிட்டு வாங்கன்னு சொல்வாங்க, அவரும் அரிசி வாங்கிட்டு வரும் போது, காக்கா, குருவிகள் பசித்து கிடப்பதை பார்த்துட்டு "காக்கை குருவி எங்கள் சாதி" என அந்த அரிசியை அதுங்களுக்கு போட்டுட்டு வீட்டுல வந்து வாங்கிக் கட்டிப்பாரு, அப்படித்தான் மயில்சாமியும்.

மயில்சாமியும் எங்கெல்லாமோ கேட்டு காசு புரட்டி விடுவான். ஆனா.. போற வழியில ஒரு பாட்டி ரோட்டு ஓரமா படுத்திருந்துச்சுனா, தான் போட்டு வந்த சட்டையை கழட்டி கொடுத்து விடுவான்; தான் கையில் வைத்திருந்த பணத்தையும் வள்ளல் போல் கொடுத்து விடுவான். இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷன்" என்று கூறியிருப்பார் நடிகர் விவேக். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.


Next Story