மலையாள நடிகர்கள் மீதான தடை நீக்கம்


மலையாள நடிகர்கள் மீதான தடை நீக்கம்
x

பிரபல மலையாள இளம் நடிகர்கள் ஷான் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்புக்கு போதையில் வருவதாகவும் படக்குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் அதிக சம்பளம் கேட்கின்றனர் என்றும் மலையாள தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன. இதையடுத்து இரண்டு நடிகர்களும் படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. அத்துடன் திரையுலகில் போதைக்கு அடிமையானவர்கள் பற்றிய விவரங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிப்போம் என்றும் அறிவித்தது.

இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூத்த நடிகர்கள் இப்போதும் நல்ல முறையில் நடந்து கொள்வதாகவும் ஆனால் இளம் நடிகர்களால் படப்பிடிப்புக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் கேரள திரைப்பட தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியது.

தடை காரணமாக ஷான் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய பட அதிபர்கள் மறுத்தனர். இந்த நிலையில் 2 நடிகர்களும் மன்னிப்பு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். இதை பரிசீலித்த மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் ஷான் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் மீது விதிக்கப்பட்டு இருந்த தடையை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.


Next Story