'கன்னட படங்களை ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை' - ரிஷப் ஷெட்டி

image courtecy:instagram@rishabshettyofficial
கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க முன்வராதது குறித்து ரிஷப் ஷெட்டி பேசினார்
சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகிறது. நேற்று 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சிறந்த நடிகருக்கான விருது ரிஷப் ஷெட்டிக்கும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது காந்தாராவுக்கும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நம் படங்கள் விழாக்களில் திரையிடப்படுகின்றன, விருதுகளை வாங்குகின்றன. இருந்தும், எந்த தளமும் நமக்கு கிடைக்கவில்லை. கன்னட படங்களை ஓ.டி.டி. நிறுவனங்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால், யூடியூபில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்,' என்றார்






