கொன்றால் பாவம்: சினிமா விமர்சனம்


கொன்றால் பாவம்: சினிமா விமர்சனம்
x
நடிகர்: சந்தோஷ் பிரதாப் நடிகை: வரலட்சுமி சரத்குமார்  டைரக்ஷன்: தயாள் பத்மநாபன் இசை: சாம்.சி.எஸ் ஒளிப்பதிவு : செழியன்

ஒரு வீட்டில் நடக்கும் கதை. அந்த வீட்டின் உரிமையாளர் சார்லி. அவருடைய மனைவி ஈஸ்வரிராவ். அந்த தம்பதியின் ஒரே மகள் வரலட்சுமி சரத்குமார். குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது. கடன் வாங்குகிறார்கள். கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்க, கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறது சார்லியின் குடும்பம்.

அந்த சூழ்நிலையில் ஒரு நாள் சார்லியின் வீட்டுக்கு வருகிறார் சந்தோஷ் பிரதாப். அன்றிரவு அவர்கள் வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்கிறார். அப்போது தன்னிடம் இருக்கும் பணம், தங்க நகைகளை அவர்களிடம் காண்பிக்கிறார்.

கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சார்லியின் குடும்பத்தினர் சபலமடைந்து சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்து விட்டு பணம் நகையை அபகரிக்க திட்டம் போடுவதும் அது நடந்ததா? என்பதும் மீதி கதை.

வில்லங்க நடிப்பில் அமர்களப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். காமெடி, எமோஷ்னல், ரொமன்ஸ், வில்லத்தனம் என நவரச நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். காதல் தோல்வியை தன் உடல்மொழியால் வெளிப்படுத்தும் காட்சிகளில் சர்வசாதாரணமாக "ஸ்கோர்' செய்கிறார்.

சந்தோஷ் பிரதாப் அளவாக நடித்து கேரக்டருக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்கிறார். குடிகார தந்தையாக வரும் சார்லி யதார்த்தமான நடிப்பில் அசத்தி இருக்கிறார். ஈஸ்வரி ராவ், சுப்ரமணிய சிவா ஆகியோரும் கதாபாத்திரங்களில் கச்சிதம்.

ஒளிப்பதிவாளர் செழியன், காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதை புரிந்து அற்புதமாக இசையமைத்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.

பெரும் பகுதி கதை ஒரே இடத்தில் நகர்வது பலகீனம். படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், வசனங்களும்தான். அது, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது.

இயக்குனர் தயாள் பத்மநாபன் கிரைம், திரில்லர் கதையை போரடிக்காமல் இயக்கியிருப்பது சிறப்பு. சென்டிமென்ட், காதல், துரோகம் என எல்லா உணர்வுகளையும் சமமாக கலந்து கொடுத்து ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார்.


Next Story