சினிமா விமர்சனம் : ஓம் வெள்ளிமலை


சினிமா விமர்சனம் : ஓம் வெள்ளிமலை
x
நடிகர்: சுப்பிரமணி நடிகை: அஞ்சு கிருஷ்ணா  டைரக்ஷன்: ஓம் விஜய் இசை: ரகுநந்தன் ஒளிப்பதிவு : மணிபெருமாள்

வெள்ளிமலை என்ற அழகான மலை கிராமம். அந்த ஊரில் வசிக்கும் அனைவரும் நோய் நொடி என்று வரும்போது பரம்பரையாக இயற்கை வைத்தியம் செய்யும் சுப்பிரமணி குடும்பத்தை நாடுகிறார்கள்.

ஒரு முறை சுப்பிரமணியின் சகோதரர் தவறான வைத்தியம் அளித்து ஒருவர் இறந்து போனதாக ஊர்மக்கள் ஆவேசப் பட்டு சுப்பிரமணி குடும்பத்திடம் வைத்தியம் பார்ப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் அரிப்பு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஒருவருக்கு சுப்பிரமணி வைத்தியம் பார்த்து குணமாக்கி மக்கள் நம்பிக்கையை பெறுகிறார்.

தொடர்ந்து ஊர்மக்கள் சுப்பிரமணியிடம் வைத்தியம் பார்க்க வரும்போது தன்னிடம் வைத்தியத்திற்கான மருந்து இல்லை அது மலை உச்சியில் இருக்கிறது என்று சொல்லி சிலரை அங்கு அழைத்துச் செல்கிறார். பயணத்தின் போது எனக்கு அரிப்புக்கான மருந்து எது என்று தெரியாது என்று சொல்லி அதிர்ச்சி தருகிறார்.

ஊரில் கொத்துக்கொத்தாக மக்கள் இறக்கின்றனர். சுப்பிரமணியால் மூலிகையை கண்டுபிடிக்க முடிந்ததா, உயிர்ப்பலியில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்ததா என்பது மீதி கதை.

சுப்பிரமணி கதையின் நாயகனாக வருகிறார். வைத்தியர் வேடத்தில் அளவாக நடித்து கவனம் பெறுகிறார். மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்று அழுது புலம்பும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.

முக்கிய வேடத்தில் வரும் வீரசுபாஷ், நாயகி அஞ்சு கிருஷ்ணா இருவருமே மக்களோடு மக்களாக கலந்து நடித்திருப்பது சிறப்பம்சம். தேர்ந்த நடிகைக்கு அழகும் நிறமும் இரண்டாம் பட்சம் தான் என்று சொல்ல வைக்கிறது நாயகி அஞ்சு கிருஷ்ணாவின் யதார்த்த நடிப்பு.

கிரிஜா, விஜயகுமார், சார்லஸ், பாண்டியன், கவிராஜ் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களில் நிறைவு.

ரகுநந்தன் இசையில் பாடல்கள் பரவசம். ஒளிப்பதிவாளர் மணிபெருமாள் மாயாஜாலம் செய்யாமலேயே படம் பார்க்கும் ரசிகர்களை கதைக் களத்துக்கு அழைத்து செல்கிறார்.

நகைச்சுவைக்கும் கொஞ்சம் காட்சிகள் வைத்து இருக்கலாம்.

இயற்கை வைத்தியத்தின் மேன்மை, ஆன்மிகத்தின் மகிமையை எந்தவித கமர்ஷியல் அம்சங்களும் இல்லாமல் அழுத்தமாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஓம் விஜய்.


Next Story