பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,160 ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன

பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க பயன்படுத்தப்படும் 2,160 எந்திரங்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் நேற்று கொண்டு வரப்பட்டன.
பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,160 ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன
Published on

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போதே தொடங்கி உள்ளது. அதன் ஒருபகுதியாக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 1,569 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சுமார் 13 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர். இதற்காக கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் இருந்து நாமக்கல்லுக்கு 4 கன்டெய்னர் லாரிகளில் 3,970 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் 2,160 கட்டுப்பாட்டு எந்திரங்கள் என மொத்தம் 6,130 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிதாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக நேற்று தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதற்கான எந்திரம் 2 கன்டெய்னர் லாரிகளில் நாமக்கல் கொண்டு வரப்பட்டன. இந்த எந்திரங்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் சரிபார்த்து நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்தனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு பெங்களூருவில் இருந்து 2,160 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com