நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.
நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
Published on

விருதுநகர்,

நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர், மல்லாங்கிணறு சாலையில் தனியார் கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலைகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல கறிக்கோழி பண்ணை விவசாயிகள், விருதுநகர் மாவட்ட ஒப்பந்த கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், கறிக்கோழி வளர்ப்பு தொகை மற்றும் இதர கறிக்கோழி வளர்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்டித்து எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு வரும் 29-ந் தேதி முதல் முழுமையான வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்கள் ஈடுபட உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி

விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி. நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், நிலத்தடி நீரில் கழிவு நீர் கலந்து நீரை மாசுபடுத்தும் நிலை உள்ளதால் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர கோரியுள்ளனர்.

விருதுநகரை சேர்ந்த சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் விருதுநகர் நகராட்சி கடையில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை கடை வாடகைக்கு ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 767-ஐ வரைவோலையாக நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தும் வாடகை தரவில்லை எனக் கூறி கடையை பூட்டி விட்டனர். எனவே நான் கொடுத்த வாடகை தொகையை கணக்கில் வரவு செய்து எனது கடையைத் திறந்து கொடுக்க உத்தரவிடுமாறு வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com