1,843 பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்கள்


1,843 பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்கள்
x
தினத்தந்தி 19 Jun 2021 4:31 PM GMT (Updated: 19 Jun 2021 4:31 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1843 பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1843 பகுதிகள் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கமும், பலி எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-வது அலையால் 19 ஆயிரத்து 188 பேர் நேற்றுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 668 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கொரோனா தொற்று பரவலின் வீரியம் குறைய தொடங்கி உள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 576 ஆக்சிஜன் படுக்கைகளும், பரமக்குடியில் 175 ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளன. 2 ஆஸ்பத்திரிகளிலும் 39 பேர் மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சிவப்பு மண்டலம்
மாவட்டத்தில் இதுவரை சுமார் 1 லட்சத்து 54 ஆயிரத்து 425 பேருக்கு கொரானா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது 980 கோவேக்சின் தடுப்பூசிகளும், 2ஆயிரத்து 80 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இருப்பு உள்ள நிலையில் நேற்று தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தாக்கம் குறைந்து விட்ட நிலையில் தற்போது ஊரக பகுதிகளில் 151 இடங்களும், நகராட்சி பகுதியில் 7 இடங்களும், பேரூராட்சி பகுதியில் 27 இடங்களும் சிவப்பு மண்டலங்களாக உள்ளன. 
மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையின் பயனாக தற்போது மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஆயிரத்து 797 இடங்களும், நகராட்சி பகுதியில் 37 இடங்களும், பேரூராட்சி பகுதியில் 9 இடங்களும் என மொத்தம் ஆயிரத்து 843 இடங்கள் நோய்த்தொற்று இல்லாத பச்சை மண்டலங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஊரக பகுதியில் 40 ஆயிரத்து 907 பேரிடமும், நகர் பகுதியில் 428 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 470 பேருக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. 
அபராதம்
கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட 522 காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் 14 ஆயிரத்து 733 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 197 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
மாவட்டத்தில் முககவசம் அணியாத வர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்தவர்களிடம் இதுவரை ரூ.1 கோடியே 50 லட்சத்து 9 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப ்பட்டுள்ளது.

Next Story