அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 19 Jun 2021 6:49 PM GMT (Updated: 19 Jun 2021 6:49 PM GMT)

சசிகலாவின் சூழ்ச்சி எந்த காலத்திலும் பலிக்காது என கரூர் மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்
கரூர் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 
கூட்டத்திற்கு, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நடந்து முடிந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. 
 கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தலைமையில் வழி நடந்து, கட்சியில் பணியாற்றுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் வெற்றிக்காக பாடுபட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வது. ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தொண்டர்களின் பேராதரவோடு கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சசிகலா, கட்சி குறித்து சம்பந்தமில்லாத கருத்துக்களை போனில் பேசி வருவதையும், தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சாதியை கட்சிக்குள் கொண்டுவர முயற்சிக்கும் சசிகலாவின் சூழ்ச்சி எந்த காலத்திலும் பலிக்காது.    பிரிவினை வாதத்தை தூண்டும் சசிகலாவை வன்மையாக கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story