நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 2.99 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 2.99 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை 2.99 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 99 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்து உள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கையும் 360-ஐ தாண்டி உள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கி இருந்தாலும், கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால் ஆங்காங்கே முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 2-ம் அலையில் உயிர்பலி அதிக அளவில் காணப்பட்டதால் பொதுமக்களும் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 75 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

2.99 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 87 ஆயிரத்து 683 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். பொதுமக்களை பொறுத்தவரையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 28,178 பேரும், இணை நோய் உள்ளவர்கள் 47,206 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50,083 பேரும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 70,555 பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 75 மையங்களில் நடைபெற்ற முகாமில் 11,700 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 385 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com