சென்னை துறைமுகம் தொகுதியில் ரூ.54¼ கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்


சென்னை துறைமுகம் தொகுதியில் ரூ.54¼ கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
x
தினத்தந்தி 20 Jun 2021 4:09 AM GMT (Updated: 20 Jun 2021 4:09 AM GMT)

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் ரூ.54¼ கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

254 குடியிருப்புகள்
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் உள்ள 254 சிதிலமடைந்த பழைய குடியிருப்புகளை அகற்றி மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ..54¼ கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்தியசென்னை எம்.பி. தயாநிதிமாறன் ஆகியோருடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துறைமுகம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பி.ஆர்.என்.கார்டன் திட்டப்பகுதியில் 96 குடியிருப்புகள், காமராஜர் காலனி திட்டப்பகுதியில் 16 குடியிருப்புகள் மற்றும் துறைமுகம் திட்டப்பகுதியில் 234 குடியிருப்புகளில் ரூ.10.96 லட்சம் செலவில் பழுதுகளை நீக்க மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைக்கும் பணிகளையும், எல்லீஸ்புரம் திட்டப்பகுதியில் மறு கட்டுமானம் செய்யவுள்ள சிதிலமடைந்த 39 குடியிருப்புகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நவீன தொழில்நுட்பம்
கருணாநிதியால், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம்”என்ற உன்னதநோக்கத்துடன், தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஏற்கனவே அதில் வசித்து வந்த குடியிருப்புதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் ஆணையினைப்பெற்று வீடுகள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடியிருப்புகள் கட்டும் பணியினை நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள் பங்கேற்பு
இந்தஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மைச்செயலர் ஹிதேஸ்குமார் எஸ் மக்வானா, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்தராவ், முதன்மை என்ஜினீயர் ராம.சேதுபதி, கண்காணிப்பு என்ஜினீயர்கள் சு.சுந்தர்ராஜ், அ.செல்வமணி, செயற்பொறியாளர்கள் எல்.மனோகரன், என்.செந்தாமரைக்கண்ணன், எஸ்.சுடலை முத்துக்குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story