சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம்


சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2021 7:17 PM GMT (Updated: 20 Jun 2021 7:17 PM GMT)

சேலத்தில் நேற்று இறைச்சி, மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது

சேலம்:
சேலத்தில் நேற்று இறைச்சி, மீன்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மீன், இறைச்சி கடைகள் 
சேலம் மாநகரில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று காலை திரளானோர் வந்து மீன் மற்றும் இறைச்சி வகைகளை வாங்கி சென்றனர். 
சூரமங்கலம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்று காலை பொதுமக்கள் திரளாக வந்து தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கி சென்றனர்.
இதேபோல் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இறைச்சி வகைகளை வாங்கி சென்றனர். 
ஆட்டு இறைச்சி 
இறைச்சி மற்றும் மீன் கடைகளில் நேற்று கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இறைச்சி விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.700-க்கும், கிராமப்புற பகுதியில் கிலோ ரூ.600-க்கும், பிராய்லர் கோழி ரூ.180-க்கும், நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. 
இதுதவிர அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, நாராயண நகர், கன்னங்குறிச்சி, அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடைகளிலும், இறைச்சி கடைகளிலும் நேற்று காலை அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. ஆனால் ஒருசில இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக நின்றதை காண முடிந்தது. 
இதனால் சேலம் மாநகராட்சி பகுதியில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
----

Next Story