

பரமத்திவேலூர்,
எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள ஒரு சோளக்காட்டில் கடந்த 7-ந் தேதி கொலை செய்து கோரை பாயால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த ஆண் உடலை பரமத்தி போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அசாம் மாநிலம் காலக்கோவா பகுதியை சேர்ந்த சிம்புசாகர் (வயது 26) என்பது தெரியவந்தது.
இவர் அசாம் மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிம்புசாகரை கொலை செய்து வீசி சென்ற மர்மநபர்களை பிடிக்க பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிறையில் அடைப்பு
அதன்படி தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சத்தீஷ்கார் மாநிலம் கொண்டக்காவு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தீஷ்கார் மாநிலத்துக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த சமுலுராம் (20) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை தமிழகத்துக்கு அழைத்து வந்து பரமத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சத்தீஸ்கார் மாநிலம் கொண்டக்காவு பகுதியை சேர்ந்த உல்லாரு மகன் ராஜ்மோலை (21) பரமத்தி போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
பாராட்டு
இந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை சத்தீஷ்கார் மாநிலம் வரை சென்று விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுத்த பரமத்தி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சகாயராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.