மாநகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை

மாநகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
மாநகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
Published on

திருச்சி, மே.17-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமாகஇருப்பதாகவும், இதனை சீரமைக்கக்கோரி பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தெரிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு கொடியுடன் திரண்டு வந்தனர். அங்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் அஜய்தங்கம், காமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மாநகராட்சி நுழைவு வாயிலை பூட்டி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கழுதையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை கைவிட்டு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பிறகு மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமானை சந்தித்து மனு அளிக்க சென்றனர். ஆனால் போலீசார் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிப்பதாக கூறினர். இதனால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பா.ஜ.க.வை சேர்ந்த 10 பேரை உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையரிடம், மாநகரில் மோசமாக உள்ள சாலைகளால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் இது குறித்து ராஜசேகரன் கூறுகையில், மாநகர் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதற்கு பணி செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வருவதில்லை. காரணம், ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்டு மிரட்டுவதாக தகவல்கள் வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளை சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com