கள்ளச்சாவியால் வீட்டை திறந்து பணம்- வெள்ளி பொருட்கள் திருட்டு


கள்ளச்சாவியால் வீட்டை திறந்து பணம்- வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 21 Jun 2021 9:00 PM GMT (Updated: 21 Jun 2021 9:00 PM GMT)

கள்ளச்சாவியால் வீட்டை திறந்து பணம்- வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் நான்குரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி விஜயா (வயது 50). வீராசாமி வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், விஜயா தனது மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு விஜயா தனது மகன் கண்ணன் என்பவருடன் வீட்டின் மாடியில் தூங்கியுள்ளார். மற்றொரு மகன் சூர்யா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கியுள்ளார். நேற்று காலை விடிந்ததும் வீட்டிற்கு வந்து விஜயா பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததோடு, பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி, பீரோவில் இருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. வீட்டின் பூட்டை உடைக்காமல், கள்ளச்சாவியை கொண்டு பூட்டை திறந்து உள்ளே புகுந்து இந்த திருட்டில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விஜயா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story