விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு: பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏல சந்தை திறப்பு விதிமுறைகளை மீறினால் மூடப்படும் என எச்சரிக்கை

விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு: பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏல சந்தை திறப்பு விதிமுறைகளை மீறினால் மூடப்படும் என எச்சரிக்கை
விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு: பரமத்திவேலூரில் வாழைத்தார் ஏல சந்தை திறப்பு விதிமுறைகளை மீறினால் மூடப்படும் என எச்சரிக்கை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டார காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்களை சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் ஏல சந்தைக்கும், பெரு விவசாயிகள் மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கையொட்டி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்பதாலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும் வாழைத்தார் ஏல சந்தை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இதனால் விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாமல் மரத்திலேயே பழுத்து அழுகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ராஜா வாய்க்கால் பாசன விவசாய சங்கம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வாழைத்தார் ஏல சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 19-ந் தேதி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும், அரசு வழிகாட்டு தலின்படி வாழைத்தார் ஏல சந்தையை நடத்த அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று வாழைத்தார் ஏல சந்தையை திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவள்ளி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி மற்றும் தோட்டக்கலைத்துறையினர் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து சந்தை நடைபெறுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறினால் வாழைத்தார் ஏல சந்தை மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com