கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 22 Jun 2021 4:40 PM GMT (Updated: 22 Jun 2021 4:40 PM GMT)

கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கூடலூர்

கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பலத்த மழை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்து வெயில் காணப்பட்டது. சில சமயங்களில் பரவலாக மழையும் பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் மிதமான வெயில் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் 4 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பாலம் மூழ்கியது

தொடர் மழையின் காரணமாக கூடலூர் அருகே புளியம்பாரா ஆற்று வாய்க்காலில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றுவாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றது.

 இதனால் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆற்று வாய்க்காலை கடக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் தேயிலை உள்ளிட்ட விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

இதேபோல் கூடலூர் அருகே பாடந்தொரை ஆற்றுவாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து ஆலவயல் பகுதியிலுள்ள கோவில் மற்றும் பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த சமயத்தில் விஷப்பாம்புகளும் தண்ணீரில் அடித்து வரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

பின்னர் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. அதன் பின்னர் வாய்க்காலில் தண்ணீர் வரத்தும் குறைந்தது. பின்னர் படிப்படியாக ஊருக்குள் புகுந்த வெள்ளம் வடிய தொடங்கியது. 

Next Story