காவிரி நீர் திருவாரூருக்கு வந்து சேர்ந்தது


காவிரி நீர் திருவாரூருக்கு வந்து சேர்ந்தது
x
தினத்தந்தி 22 Jun 2021 6:07 PM GMT (Updated: 22 Jun 2021 6:07 PM GMT)

கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான திருவாரூருக்கு வந்தடைந்ததால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

திருவாரூர்;
கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான திருவாரூருக்கு வந்தடைந்ததால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடி பணிக்காக கல்லணையில் இருந்து கடந்த 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
சாகுபடி பணி 
இந்தநிலையில் நேற்று வெட்டாற்று பாசனத்துக்கு உட்பட்ட வெட்டாறு, ஓடம்போக்கியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி நீர் திருவாரூருக்கு வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக நாற்றாங்கால் அமைத்து நடவு முறை, திருந்திய நெல் சாகுபடி, நேரடி விதைப்பு போன்ற பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். குறுகிய கால விதைகள், இடுபொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்கவும், பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story