அதிராம்பட்டினம் அருகே, நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சாவு


அதிராம்பட்டினம் அருகே, நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சாவு
x
தினத்தந்தி 22 Jun 2021 7:39 PM GMT (Updated: 22 Jun 2021 7:39 PM GMT)

அதிராம்பட்டினம் அருகே நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினம் அருகே நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

ரூ.25 லட்சம் கடன்   

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் அய்யப்பன். இவர் அதே ஊரில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டல் விரிவாக்கத்துக்காக கடந்த 2019-ம் ஆண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் வீதம் திருப்பி செலுத்துவதாக கூறி ரூ.25 லட்சம் கடனாக பெற்று இருந்தார். 
இந்த நிலையில் கொரோனா முதல் அலை ஊரடங்கால் அய்யப்பனால், நிதி நிறுவனத்துக்கு முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் நிதி நிறுவனத்தினர் பணம் கேட்டு அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்தனர். 

நிதி நிறுவனத்தினர் நெருக்கடி

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் அய்யப்பன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தலையிட்டு அய்யப்பனிடம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வசூலித்து கொள்ள வேண்டும் என கூறினர். இதனையடுத்து சில மாதங்கள் மட்டுமே பணம் திருப்பி செலுத்திய நிலையில், கொரோனா 2-வது அலையில் ஓட்டல் தொழில் மேலும் முடங்கியது.இதனால் அய்யப்பன் ஓட்டலை பூட்டி விட்டார். இதன் காரணமாக நிதி நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டார், வேறு சொத்துகளை விற்று திருப்பி செலுத்துவதாக இருந்த நிலையில் நிதி நிறுவனத்தினர் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். 

மாடியில் இருந்து கீழே குதித்தார்

இைதயடுத்து கடந்த 11-ந் தேதி அய்யப்பன், தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோருக்கு ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில் பணத்தை கொடுக்காததால் நிதி நிறுவனத்தினர் வீட்டுக்கே வந்து மிரட்டுவதாகவும், இதனால் தனது குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாகவும் புகார் மனு அனுப்பியிருந்தார். 
இதற்கிடையில் அய்யப்பனின் தாய் தமிழரசி(வயது 50) கடந்த 18-ந் தேதி மன உளைச்சல் அதிகமாகி வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பரிதாப சாவு

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடியால் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story