

காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் விளையாட்டு அறிவியல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் முதல்வர் முனைவர் ராஜலட்சுமி வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் சுவாமிநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்கள் எந்த செயலை செய்தாலும் அவற்றை முழுமையாக செய்ய வேண்டும். இந்திய அளவில் விளையாட்டுத்துறையின் மிக உயரிய பதவிகளில் இருப்பவர்கள் கல்லூரியில் படித்தவர்கள். விளையாட்டு துறை மாணவர்கள் தங்கள் விளையாட்டு செயல் திறனை மேம்படுத்துவதற்கு இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் கருப்பு சாமி தொடக்கவுரை நிகழ்த்தினார். சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உயிரி இயக்கவியல் மற்றும் விளையாட்டு அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ரஜினிகுமார் பழனியப்பன் சிறப்புரையாற்றினார்.கருத்தரங்கில் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.